நீ சேயானாய் … நான் தாயானேன்
Posted: அக்டோபர் 31, 2011 in காதல், ரோஜாகுறிச்சொற்கள்:உணர்வு, உணர்வுகள், கண், கரு, காதல், கோபம், தாய்ப்பால், நான் தாயானேன், நீ சேயானாய், நொடி, பால், பெண்ணே, மனிதர், மார்பு, முகம், மெளனம், வார்த்தை
உங்களுக்கு என்னைத் தவிர
உலகத்தில் வேறு எதுவும்
கண்ணுக்குத் தெரியாதா?
கோபமாகக் கேட்டாய் நீ…
பெண்ணே!
உலகத்தை விட்டு வெளியில்
வந்துப் பார்த்தால் தான் உலகம்
தெரியுமாம்
என் உலகமான உன்னையோ
நான் உன்னிலிருந்தே பார்க்கிறேன்
எனக்கு உன்னைத் தவிர வேறெதுவும்
தெரியவில்லையடி
நான் என்ன செய்ய…?
என் முதல் பசியை ஆற்றிய
தாய்பாலின் ஒரு துளியிலிருந்து
வந்ததடி இந்த உணர்வு
என் தாயைத் தவிர வேறெவரையும்
காண சகியாத நாட்கள்
கண்ட மனிதர்களிடமும் தாயைக்
காணத் துடித்த உணர்வுகள்
அத்தனையும் இன்று உன்னிடமும்
விழித்தெழுந்து என்னை உன்னை
நோக்கியே திருப்புகிறது
என்ன செய்வது …?
என்றேன்
ஒன்றுமே புரியாமல்
என்னையேப் பார்த்தாய்
கருவை சுமந்தறியாத
ஒரு தாய்மை உன் கண்களில்
தெரிந்தது.
வார்த்தைகளற்ற
அந்த மௌனமான நேரத்தில்
தான் நம் காதல் அடிக்கடி
தன்னைப் புதுப்பித்துக் கொள்வதை
உணர முடிகிறது.
நம் காதலில் நீ தாய் நான் சேய்
நானும் சில நொடிகளில் தாயாகலாம்
நீ சேயாகும் பொழுது…
அந்த நொடிகளை நீ அவ்வளவு
எளிதில் எனக்கு விட்டுக் கொடுப்பதில்லை
என்றதும்
சட்டென்று
என் மார்பில் தலையை
சாய்த்து உன் முகத்தை மறைத்து
கொண்டாய்…
என் நெஞ்சில் லேசான குளிர்மையை
உணர்கையில் தான் தெரிந்தது
அந்நொடி நம் காதலில்
நீ சேயானாய் …
நான் தாயானேன்
மறுமொழிகள்










தாய் சேயாவதும்
சேய் தாயாவதும்……
உணர்வுகளின் இனிய விளையாட்டு
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திர்கும் மிக்க நன்றி கதிர்முருகா