இது என்ன புது உணர்வு
எதைக் கொடுப்பது நான்…
நீ என்னிடம் எடுத்துச் சென்றது
திரும்பப் பெற முடியாத உணர்வுகள்
அல்லவா…
அப்படியிருக்க என்னிடம் நீ
எதைக் கேட்கிறாய் பெண்ணே!
கொடுத்த சில பொருட்களைத்
திருப்பிக் கொடுத்துவிட்டு
எல்லாவற்றையும்
நான் கொடுத்துவிட்டேன்…
இத்துடன் என்னை மறந்துவிடு என்கிறாயே….
என்னிடம் அன்று நீ பொருட்களை
மட்டும் தானா பெற்றாய்…
என்னை விட்டு வேறு யாரையாவது
பார்த்துக் கொள்ளுங்கள்
என்று சொல்கிறாயே…
மனம் என்ன காதலின் விருந்தாளியா?
ஒவ்வொரு முறையும் அழைத்து உபசரிக்க…
அது உயிரின் கோவில் அல்லவா
வழிபாடு எவ்வளவு வேண்டுமானாலும்
இருக்கலாம்
அதில் உருவம்
ஒன்று தானே இருக்க முடியும்
என்னிடம் இருக்கும் அத்தனைக் காதலுக்கும்
முழு உருவம் நீ தானே
என் மனதின் அடி ஆழங்களை
என் அந்தரங்கங்களை
எவ்வித போலியுமின்றி
ஒளிவு மறைவுமின்றி
உன்னிடம் மட்டுமே பகிர்ந்திருக்கிறேன்…
உடல் நிர்வாணத்தை காட்டிலும்
நம் உள்ள நிர்வாணத்தை பகிர்தலில்
தான் நம் ஒவ்வொரு காதல் தருணமும்
நகர்ந்தது….
இனியொரு முறை என் உள்ளத்தை
வேறு யாருடனேயும் என்னால் பகிர
முடியுமென்றால் நான் போலியாகத் தான்
இருக்க முடியும் பெண்ணே!
என்னை போலியாக்கிவிட்டு நீ
மட்டும் உண்மையாக எப்படி இருக்க
முடியும்…?
எனக்குத் தெரிகிறது உன் நடிப்பு
ஆனால் உனக்கு எப்பொழுது தெரியப்
போகிறது நீ நடித்துக்
கொண்டிருக்கிறாய் என்பது,
காலம் நிச்சயம் எதேனும் ஒரு
தருணத்தில் உன் போலித் தனத்தை
உனக்கு சுட்டிக் காட்டலாம்
அங்கே நீ என்று சொல்வதற்கு
உன் நினைவுகள் கூட உன்னிடம் இருக்காது
அந்நொடி நீ சிந்த கண்ணீர் கூட
உனக்குத் துணைக்கு வராது.